“நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை” – பத்மனாதன்,விடுதலைப் புலிகளின் பேச்சாளர்.
30 வருடங்கள் பட்டது போதும் என்று இந்த மக்கள் மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் இறுதித் தருவாயிலும், இன்னும் ஏன் இந்தப் பிடிவாதம் ?
இதுதான் நடக்கப்போகிறது என்பது அன்று மன்னார்,பூனேரி இல்லை கிளிநொச்சி போன போதும் கூடவா நீங்கள் அறி்ந்திருக்கவில்லை?
“வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது”
என்று சர்வதேசத்தின் மேல் பாரத்தை அள்ளிப் போட்டு யாரிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்? மீண்டும் மீண்டும் அதே தவறைத்தான் செய்கிறார்கள், இந்த அறிக்கைகளின் முழு நோக்கமும் விடுதலைப் புலிகளின் தீவிர வெளிநாடு வாழ் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற் பிரயோகங்களாகும்.
ஆயுதங்களை மெளனிக்கத்தயாராக இருக்கிறோம்..? தப்பித்தவறியும் இது சரணடைகிறோம் என்ற பொருளல்ல என்று தமது ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவே இன்னும் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவரது இந்த அறிக்கைக்கு முன்னராகவே, TIMES ONLINE ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6301821.ece
அந்த அறிக்கையில் இந்தக் கோரிக்கை செய்மதித் தொலைத் தொடர்பு ஊடாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், குறிப்பாக இந்தத் தொலைத் தொடர்பின் போது தலைமையிடம் இருந்து “சரணடைதல் என்று சொல்ல வேண்டாம்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
“Don’t say surrender,” insisted the leader, speaking calmly, despite the obvious desperation of the few survivors of the once ferocious Liberation Tigers of Tamil Eelam (LTTE), now cornered in an area roughly the size of Hyde Park with tens of thousands of civilians.
இன்னும் ஏன் ? நீங்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து, கொல்லப்பட வேண்டும் என்பதற்காக உங்கள் முன் இந்தக் கேள்வி முன் வைக்கப்பட வில்லை.
இந்த “அறிவை” எப்போதோ உணர்ந்திருக்க வேண்டிய நீங்கள் ஏன் தவறினீர்கள் என்பதுதான் கேள்வி.
ஒரு நிலையற்ற அரசியல் போக்கின் பலவீனத்தைப் பாவித்து, அதே நிலையற்ற ஊக்கப்போராட்டத்தை உந்திச்சென்றீர்களே தவிர, நீங்கள் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை எப்போதோ அறிந்த அதே தமிழ் மக்கள், அன்று மாவிலாறில் நீங்கள் ஆரம்பித்தது முதல் இதைத்தான் சொல்கிறார்கள்.
நீங்கள் இதைச் செய்வீர்கள் என்று எதிர்பார்த்ததனாலோ என்னவோ 400m x 600m அளவுக்குள், அதுவும் பொதுமக்கள் யாரும் இல்லை, ஐ.நா சொன்ன கணக்குப்படி பார்த்தால் கூட 50,000 மக்கள் வெளிவந்து விட்டார்கள், எனவே அங்கே விடுதலைப்புலிகள் அவர்கள் தலைவர்கள் மாத்திரமே இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.
கற்கால வித்தைகளை நம்பி, இப்படி இறுதி நேரத்தில் வரும் “அவசர” அறிக்கைகள் மூலம் காலில் விழுந்து விட்டீர்கள் என்ற பழிச்சொல்தான் மிஞ்சுமே தவிர நீங்கள் ஒரு “தியாகமும்” செய்யவில்லை என்பது பரகசியமான உண்மை.
எமது வலைப்பூவில் கூட ஒரு அன்பர், “தம் வர்க்கத்திற்காகவாவது தொடர்ந்தும் அவர்கள் போராடுகிறார்கள் தானெ” என்று தன் ஆதங்கத்தை உங்கள் ஆதரவுக்காகத் தெரிவித்திருந்தார், அவர் தீவிர ஆதரவாளனாக இருந்தால் இப்போதும் “அவர்கள் மக்களுக்காக தான் இந்த முடிவை எடுத்தார்கள் என்பார், அப்படியில்லாமல் “இதற்கு முன்னரே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் ஆகக்குறைந்தது எத்தனை ஆயிரம் உயிர்கள் மிஞ்சியிருக்கும்? எத்தனை ஆயிரம் மக்களின் உடைமைகள், கை,கால்கள், வாழ்க்கை மிஞ்சியிருக்கும் எனறு கணக்குப் பார்த்தாரேயானால் உங்கள் “கற்கால” வித்தையை இன்று தான் உணர்ந்தவராக பூரித்துப் போவார்.
10,000 பேரை பலி கொடுத்துத்தானா ஐ.நா வில் நம் பிரச்சினையைப் பேச வைக்க வேண்டும்? என்று ஒரு முன்னாள் ஆதரவாளர் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார், இப்போது அதே ஆதரவாளர் 3000 பேர், பத்மனாதன் சொல்வதன் படி 3000 பிணங்கள் கண் முன்னே அதுவும் 400m x 600m அளவு இடத்திற்குள் விழுந்து கிடப்பதனால், அதைக் கண்ணாலே கண்ணுற்றதனால் தானா இந்த “ஆயுத மெளனிப்பின்” அவசியம் உங்களுக்கு அவசியப்படுகிறது என்று கேட்கத் துணிந்தால்..?
இதன் விளைவுகள், இதற்கான முடிவுகள் உலக அரசியல் அரங்கில் எப்படியிருக்குமே தெரியவில்லை, ஆனால் இறுதியில் நீங்கள் இப்படித்தான் ஆவீர்கள் என்று எதிர்பார்த்தவர்கள் கணக்குகள் பொய்யாகவில்லை.
அன்றே உங்களுக்குக் கிடைத்திருந்த அந்தஸ்தைப் பயன்படுத்தி மக்கள் நலனை முதற்படுத்தி அரசியற் திட்டங்களை நீங்கள் வழி நடத்திச்சென்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்கப்போவதில்லை.
அதிலும், இந்த சண்டையில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பகற் கனவு என்று அவருக்கு சவால் விட முன்னராவது சிந்தித்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் அவசியம் இல்லை.
உங்கள் அரசியல் வங்குரோத்தின் இறுதி அத்தியாயம் இது, இதை உலக அரங்கம் எப்படிக் கையாளப்போகிறது என்பது இந்த அத்தியாயத்தின் க்ளைமாக்ஸ்.
நல்லது நடக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பும், ஆனால் அந்த “நல்லது” என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வெவ்வேறு “நல்லதாக” வரலாற்றை உருவாக்கியதே நீங்கள்.
எனவே, எந்த “நல்லது” நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8054169.stm